×

போதிய ஆதாரங்கள் இல்லை... அத்வானி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை : 28 ஆண்டுகளாக நீடித்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு!!

லக்னோ : 28 ஆண்டுகளாக நடந்து வரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேரையும் லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். மேலும் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிட்டது அல்ல என்றும் குற்றச்சாட்டுகளை சிபிஐ போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்தார்.

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கின் பின்னணி!!

*உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி யில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ரேபரேலியில் ஒரு வழக்கும் லக்னோவில் ஒரு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ரேபரேலியில் நடந்த வழக்கை லக்னோ சிபிஐ நீதிமன்றத்திற்கு 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாற்றியது.பாபர் மசூதி இடிப்பு வழக்குகள் இரண்டையும் ஒன்றாக விசாரிக்க 2017ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

*இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம்சாட்டப் பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆர்) இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன.

*குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

*கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந் தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

*இறுதியாக, அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

*இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு வழங்கி உள்ளார். 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்ததாலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் உமாபாரதி, உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 6 பேர் காணொளி காட்சி மூலம் ஆஜராகினர்.


Tags : Uma Bharati ,Babri Masjid ,Advani , Sources, Advani, Uma Bharati, Liberation, Babri Masjid, Demolition, Case, Judgment
× RELATED தாவுத் கூட்டாளி அப்துல் கரீம் விடுவிப்பு