×

குமரியில் செயல்படாத மெடிக்கல் பெயரில் கொள்முதல்: வீடுகளுக்கே நேரடியாக போதை ஊசி சப்ளை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கஞ்சா, போதை ஊசி கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செயல்படாத மெடிக்கல் பெயரில் கொள்முதல் செய்து வீடுகளுக்கே போதை ஊசி சப்ளை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

நாகர்கோவில் வடசேரி போலீசார் கடந்த 27ம்தேதி இரவு வடசேரி பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது கார் ஒன்றை சோதனை செய்தனர். அதிலிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட, காரில் இருந்த நாகர்கோவில் கட்டையன்விளை காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (55), மேலபுத்தேரியை சேர்ந்த சரவணன் (23), பறக்கை எம்.எம்.ேக. நகரை சேர்ந்த முத்துக்குமார் என்ற மணிகண்டன் (33), திருநெல்வேலி வி.கே.புரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா (31), திருநெல்வேலி கருங்குளம் கண்ணன் (46) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். காரில் சோதனை நடத்திய போது 2.25 கிலோ கஞ்சா மற்றும் ஊசி மருந்துகள், சிரிஞ்ச் பாக்கெட்டுகள் ஆகியவை இருந்தன.

இந்த ஊசி மருந்துகள் அனைத்தும் மருத்துவமனைகளில் வலி நிவாரணம் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக பயன்படுத்த கூடியதாகும். இதை இந்த கும்பல் போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 5 பேரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் தப்பி ஓடியது நாகர்கோவில் அருகுவிளையை சேர்ந்த சேகர் என்ற லோடுமேன் சேகர், சரத் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவே லோடு மேன் சேகர் மற்றும் சரத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், ஆசாரிபள்ளத்தை சேர்ந்த மரிய அற்புதம் என்பவர் மூலம் தான் ஊசி மருந்துகள் கிடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மரிய அற்புதம்தான் இந்த போதை கும்பலுக்கு தலைவன். இவர், ஆசாரிபள்ளத்தில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் பைனான்ஸ் நடத்தி உள்ளார். தொழில் முடக்கத்தால், இவற்றை மூடியவர், மெடிக்கல் ஸ்டோருக்கான லைசென்சை வைத்து தனக்கு தெரிந்த மருந்து விற்பனை பிரதிநிதிகள் மூலம், ஊசி மருந்துகளை வாங்கினார். இந்த மருந்துகளை லோடுமேன் சேகர் மூலம் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்துள்ளார். ரெகுலர் கஸ்டமர்களுக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று சப்ளை செய்துள்ளனர்.

மேலும் வாட்ஸ் அப் குழுவும் வைத்துள்ளனர். அதில் ரகசிய குறியீடுகள் மூலம் தகவல்களை பரிமாறி உள்ளனர். பெண்களுடனும் தொடர்பு இருந்திருக்கிறது. இவர்களின் மொபைல் எண்களுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். கைதான 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விரைவில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று டி.எஸ்.பி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Tags : households ,Kumari , Cannabis, drug injection
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து