×

நில அபகரிப்பு செய்ததாக குற்றச்சாட்டு முன்னாள் போலீஸ் அதிகாரி மீதான வழக்கு ரத்து

சென்னை: நில அபகரிப்பு செய்ததாக தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால் என்பவருக்கு சொந்தமாக சோழிங்கநல்லூரில் உள்ள நிலத்தை அபகரித்ததாக, தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் டிஜிபி துக்கையாண்டி, அவரது மனைவி, மகள் மீது வழக்குப்பதியப்பட்டது. இதையடுத்து, 2019ல் துக்கையாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சரியாக பதில் தரவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, பனையூரில் உள்ள துக்கையாண்டி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தன் மீதும், மனைவி, மகள் மீதும் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, துக்கையாண்டியும், அவரது மகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கில் துக்கையாண்டி மற்றும் அவரது மனைவி, மகள் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : police officer , Dismisses case against former police officer accused of land grabbing
× RELATED பயிற்சி முடித்துள்ள காவலர்கள்...