சென்னை: ஊரடங்கில் வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொரோனா தொற்று பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25ம்தேதி விவசாய சங்கத்தினர் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், இந்திய, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், டி.கே.எஸ்., உள்பட 140 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கீழ் படியாமை, தொற்று நோயை பரப்பும் வகையில் நடந்து கொள்ளுதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல், கடலூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் எம்பி உள்பட 250 பேர் மீது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் வைகோ, தமிழச்சி தங்கப்பாண்டியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.