×

மழையால் அறுவடை பணி பாதிப்பு: குமரியில் அழுகி வீணாகும் வைக்கோல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இருபோக நெல் விவசாயம் நடந்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை நம்பியே இந்த நெல் விவசாயம் நடக்கிறது. மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டது. சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவை அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில், நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குமரி மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் திறந்தது. அறுவடை செய்யப்படும் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு 100 கிலோவிற்கு ரூ.1865 கிடைத்து வருகிறது. மாவட்டத்தில் முதலில் பறக்கை, சுசீந்திரம் பகுதியில் நெல் அறுவடை நடந்தது. இந்நிலையில் தாழக்குடி, தெரிசனங்கோப்பு, கடுக்கரை, செண்பகராமன்புதூர், இறச்சகுளம், பார்வதிபுரம், ஈசாந்திமங்கலம் உள்பட பலர் பகுதிகளில் இன்னும் அறுவடை நடக்க வில்லை. அறுவடை தொடங்கும் நிலையில் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாரான நிலையில் வயல்களில் தண்ணீர் தேங்கியது. நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. மழை விட்டு வெயில் அடிக்கும் நாளில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யும் நெல்களை வியாபாரிகள் நேரடியாக வயல்களில் வந்து விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

அதிக ஈரப்பதத்துடன் இருக்கும் நெல்லை வியாபாரிகள் ஒரு கோட்டை(87 கிலோ) ரூ.1100க்கு வாங்குகின்றனர். ஆனால் நெல் ஈரம் இல்லாமல் கொடுத்தால் ரூ.1200 வரை விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் கிடைக்கும் பணத்திற்கு நெல்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் ஈரப்பதம் இல்லாத நெல்களை விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு கொடுக்கின்றனர்.

மழையில் வயல்கள் மூழ்கியதால், வைக்கோல்கள் எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வைக்கோல் மூலம் கிடைக்கும் வருமானம் தடைப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின. ஏற்கனவே அறுவடை செய்து வயலில் கட்டி வைக்கப்பட்டிருந்த வைக்கோல்கள்  தண்ணீரில் மூழ்கி அழுகின. நாளெல்லாம் இரவு பகலாக உழைத்து களைத்த  விவசாயிகளுக்கு உழைப்பின் பயன் வீடு வந்து சேரும் நேரத்தில் மழை, வெள்ளம்  போன்ற இயற்கை சீற்றங்களால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழையால்  நெற்கதிர்கள் மற்றும் வைக்கோல் அழுகி வீணானதால் விவசாயிகள் விரக்தி  அடைந்துள்ளனர்.

நல்ல மகசூல் இருந்தும் மழையால் நஷ்டம்

இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: கன்னிப்பூ சாகுபடி செய்த போது காலநிலை ஒத்து வந்தது. இதனால் வயல்களில் அதிக விளைச்சல் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த காலத்தில் அறுவடை நடக்கும். இதனால் நெல், வைக்கோல் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். ஆனால் இந்த வருடம் வெயில் அடிக்கும் காலமான செப்டம்பர் மாதத்தில் மழை பெய்து, அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நல்ல மகசூல் இருந்தும், அதனை அறுவடை செய்து எடுக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்  30 சதவீதத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு ஏக்கர் நிலத்தில் வைக்கோல் மூலம் அனைத்து செலவு போக ரூ.5 ஆயிரம் கிடைக்கும். ஆனால் தற்போது பெய்த மழையால் வைக்கோல் அனைத்தும் அழுகியுள்ளது. இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் நல்ல மகசூல் இருந்தும் இந்த மழையால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்றார்.

Tags : Rotten ,Kumari , Straw, rain, Nagercoil
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...