சென்னை: பாரம்பரிய ஆய்வு குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி என கமல்ஹாசன் கூறியுள்ளார். மத்திய அரசு இந்தியாவின் கலாச்சாரம், மற்றும் பாரம்பரியத்தை ஆய்வு செய்ய அறிஞர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: பழமையும், பன்முகத்தன்மையும் இந்திய கலாச்சாரத்தின் அடிநாதம். 12 ஆயிரம் வருட பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை யை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி. தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இன்றி இந்திய சரித்திரம் கிடையாது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.