×

அருப்புக்கோட்டை நகரில் புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்: வணிக நிறுவனத்தினர் குற்றச்சாட்டு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் புதிய வீடு கட்டுவதற்கு தற்காலிகமாக மின் இணைப்பை மின்வாரியத்தில் பெற வேண்டும். மின்வாரியம் டேரிப் 6 விகிதப்படி மின் இணைப்பு கொடுக்கின்றனர். பின்னர் வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் நிரந்தர மின்இணைப்பு பெற மீண்டும் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து நிரந்தர மின்இணைப்பு பெறவேண்டும். 1ஏ விகிதப்படி வீடுகளுக்கு நிரந்தர மின்இணைப்பு வழங்கப்படுகிறது. இதே போன்று வணிக நிறுவனங்கள்,சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு புதியகட்டிடங்கள் கட்டும் போது தற்காலிக மின்இணைப்பு பெறுகின்றனர். பணிகள் முடிவடைந்தவுடன், நிரந்தர மின்இணைப்பிற்கு விண்ணப்பிக்கின்றனர்.அதற்கு நகராட்சி பகுதியாக இருந்தால் சொத்துவரி ரசீது மற்றும் சில ஆவணங்களை இணைக்கின்றனர். ஆனால், மின்வாரியத்தினர் நகராட்சியிலிருந்து கட்டிடப்பணி நிறைவடைந்ததற்கான சான்றிதழ் வாங்கி இணைத்தால் தான்  நிரந்தர இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியத்தினர் கண்டிப்பு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், நகராட்சி அலுவலகம் சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் சான்று கேட்டால், நாங்கள் வணிக நிறுவனத்திற்கான வரி ரசீது மட்டும்தான் தருவோம் என்று கூறுகின்றனர். இதனால் நகரில் 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவன கட்டிடங்களுக்கு மின்இணைப்பு பெறமுடியாமல் இருக்கின்றனர். இதனால் பிற பணிகளையும் செய்ய முடியவில்லை. வணிக நிறுவனங்களுக்கு தடையின்றி மின்இணைப்பு கொடுத்தால் மின் வாரியத்திற்குகூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே, மின்வாரி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர். மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,`` தமிழகம் முழுவதும் இந்த பிரச்னை உள்ளது. உயர் அதிகாரிகள் இதுகுறித்து முடிவு எடுக்க உள்ளனர். விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்.

Tags : Aruppukkottai ,Businesses , Electrical connection, business entities, charge
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்