திருவனந்தபுரம், : யூ-டியூப் சேனலில் ஆபாசமாக கருத்துக்களை தெரிவித்த விஜய் பி.நாயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கரி ஆயில் பூசிய பாக்யலட்சுமி உட்பட 3 பேரையும் அமைச்சர் ஷைலஜா பாராட்டினார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஜய் பி.நாயர். யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பிரபல சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி தலைமையில் 3 பெண்கள் விஜய் பி.நாயர் வீட்டிற்கு சென்று அவர் மீது கரி ஆயிலை ஊற்றினர்.
இதுகுறித்து விஜய் பி.நாயர் தம்பானூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டப்பிங் கலைஞர் பாக்கிய லட்சுமி, செயல்பாட்டாளர்களான தியா சனா, லட்சுமி ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுயது: பெண்களுக்கு எதிரான ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வந்த விஜய் பி.நாயரின் செயல் மிகவும் மோசமானது. அவரை தட்டிக்கேட்ட பாக்யலட்சுமி உள்பட 3 பேருக்கும் பாராட்டுக்கள். அவர்களின் எதிர்ப்பு முறையில் உள்ள தவறுகளை பற்றி பின்னர் சிந்திப்போம்.
நம் குடும்ப உறுப்பினர்களை யாராவது அவமதித்திருந்தால் என்ன செய்வோம் என்ற அதே வேதனையுடன் சமூகம் இத்தகைய பதிவுகளை கருத வேண்டும். பெண்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பணம் தேடும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இதுபோன்றவர்களுக்கு எதிராக போராட பொதுமக்கள் முன்வர வேண்டும். இதுபோன்ற சேனல்களை நாம் ஆதரிக்கக்கூடாது. அவற்றின் பதிவுகளையும் பகிரப்படக்கூடாது. இவ்வாறு அமைச்சர் ஷைலஜா கூறினார்.