×

நித்திரவிளை அருகே பட்டப்பகலில் துணிகரம்: சாலையில் நடந்து சென்ற சிறுமியிடம் செயின் பறிப்பு

நித்திரவிளை: நித்திரவிளை அருகே எஸ் டி மங்காடு பகுதியை சேர்ந்த தனபாலன். பிளம்பர். இவரது அத்தையை எஸ்டி மங்காடு தபால் நிலைய சந்திப்பில் இருந்து பஸ் ஏற்றி விடுவதற்காக நேற்று மதியம் தனபாலனின் 14 வயது மகள் மற்றும் மகன் சென்றுள்ளனர். பாட்டியை பஸ் ஏற்றி விட்டு விட்டு அக்காவும், தம்பியும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு பேர் பைக்கில் எதிரே வந்தனர். அவர்கள் சிறுமியை இடிப்பது போல் வந்துள்ளனர். சுதாரித்து கொண்ட சிறுமி சற்று நீங்கியுள்ளார்.

தொடர்ந்து கொள்ளையர்கள் சிறிது தூரம் சென்றதும் பைக்கை நிறுத்தி உள்ளனர். பின்னால் இருந்தவன் இறங்கி வந்து சிறுமியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தான். பின்னர் அவர்கள் பைக்கில் நித்திரவிளையை நோக்கி தப்பி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் வந்த பைக்கின் நம்பர் பிளேட்டில் நம்பர் எழுதாமல் இருந்தது. கொள்ளையர்கள் பறித்து சென்ற நகை அடகு வைக்கப்பட்டிருந்தது. அதனை நேற்றுமுன்தினம் தான் வங்கியில் இருந்து திருப்பி தனபாலன் மகளுக்கு கொடுத்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து நித்திரவிளை போலீசில் தனபாலன் புகார் செய்தார்.

Tags : Graduation venture ,Chain ,Nithravilai ,road , nithiravilai, girl, chain flush
× RELATED நித்திரவிளை அருகே மர்மமாக இறந்த...