பியொங்யாங்: தங்கள் நாட்டு அரசு அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று தென்கொரியா கூறியுள்ள நிலையில், அந்நாட்டு கப்பல்கள் கடல் எல்லையை மீறியதாக வடகொரியா குற்றம் சாட்டிருக்கிறது. வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் இருக்கும் பகுதியான கடல் எல்லை ராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய பகுதியாகும்.
இந்நிலையில் தென்கொரிய மற்றும் வடகொரிய எல்லையில் சட்டவிரோத மீன் பிடித்தலை கண்டறிவதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கொரிய மீன்வளத்துறை அரசு அதிகாரி, எரிந்த நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார். கடல் எல்லையை மீறியதாக கூறி வடகொரியா இராணுவம் அவரை சுட்டுக்கொன்று மண்ணெணெய் ஊற்றி எரித்ததாக தென்கொரியா கூறியுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டதையடுத்து அதிகாரி கொல்லப்பட்டதற்கு வடகொரியா அதிபர் கிம் ஜான் உன் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் அரசு அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து கூட்டு விசாரணை நடத்தவேண்டுமென்று தென்கொரிய அரசு வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் அதிகாரியின் உடலை தேடும் பணியில் தென்கொரிய கப்பல்கள் கடல் எல்லையை மீறியதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் தேடுதல் பணியின்போது வடகொரிய கடல் எல்லைக்குள் தங்கள் நாட்டு கப்பல்கள் நுழையவில்லை என்று தென்கொரியா விளக்கமளித்துள்ளது.