பொள்ளாச்சி: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடந்த வளர்ச்சி பணிகளை துவக்கி வைப்பதற்கும், பார்வையிடுவதற்கும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், சட்டமன்ற கூட்ட தொடரில் பங்கேற்ற அவர் சென்னையில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டிருந்தார். அவருக்கு 2 தினங்களுக்கு முன் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியானது. இதில், அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்பிக்கு கொரோனா: கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடலூர் தொகுதி முன்னாள் எம்பியுமான அருண்மொழிதேவனின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அருண்மொழிதேவனும் பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.