திருப்போரூர்: திருப்போரூர் இள்ளலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (38). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான ஈச்சங்காடு கிராமத்தில் விவசாய வேலைகளை கவனிப்பதற்காக மனைவி லட்சுமி, மகன்கள் ஜீவா மற்றும் வசந்த் ஆகியோருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: திருப்போரூர் அடுத்த காலவாக்கம் ஓ.எம்.ஆர். சாலை பகுதியை சேர்ந்தவர் வேதாச்சலம். நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு மேலக்கோட்டையூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றனர். ஆனால் பொருட்கள் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.