சென்னை: அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள 1300 சிலைகளில் 830 கற்சிலைகள் உட்பட ஏராளமான சிலைகள் காணாமல் போயுள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன சிலை விவரங்களை கடந்த 1950ம் ஆண்டில் இருந்து தொகுத்து படிவத்தில் அனுப்பிட அனைத்து கோயில் அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்த படிவத்தில் மாவட்டத்தின் பெயர், கோயில் பெயர் மற்றும் முகவரி, 1950ம் ஆண்டில் இருந்து காணாமல்/களவு போன சிலைகளின் விவரம், அதில், கற்சிலை விவரம், பெயர், உலோக சிலை விவரம், பெயர், காணாமல் போன தேதி/வருடம், களவு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதா? செய்யப்பட்டிருப்பின் முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கின் விவரம் உள்ளிட்ட விவரங்கள் அந்த படிவத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.