திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு அணிவித்தும் சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவதற்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரியார் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியார் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட விரோதிகளை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டாம் என்றும் தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டத்தை முன் எடுத்து செல்வோம் என்றும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் பதிவில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்! என்று பதிவிட்டுள்ளார்.