திருவனந்தபுரம்:கேரளாவில் தொடரும் மழையால் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இந்த மாதத்தில் 274 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இதனால், கேரளாவின் முக்கிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் நேற்று காலை 10 மணியளவில் நீர்மட்டம் 2,388.08 அடியை எட்டியது. அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மேலும் 7 அடி உயர்ந்தால் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்படும். ேமலும் நீர்மட்டம் 2,395.98 அடியை எட்டும்போது அணை திறக்கப்படும். அணையின் நீர்மட்டத்தை சீராக்க மூலமட்டத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.