புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்திக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. புதுவையில் ெகாரோனா பாதிப்புக்கு ஏற்கனவே அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி மற்றும் எம்எல்ஏக்கள் ஜெயபால் (என்.ஆர். காங்கிரஸ்), சிவா (திமுக), பாஸ்கர் (அதிமுக), அனந்தராமன் (காங்கிரஸ்) ஆகியோர் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்தநிலையில், அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்திக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உதவியாளர், டிரைவர் ஆகியோருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயமூர்த்தியின் அண்ணன் ராஜேந்திரன், கொரோனாவால் பாதித்து கடந்த மாதம் உயிரிழந்தார். நேற்று முன்தினம் அவரது 30ம்நாள் நினைவு அனுசரித்த நிலையில் எம்எல்ஏவுக்கு தொற்று இருப்பதால் அவரது உறவினர்கள் கலக்கமடைந்துள்ளனர். எனவே, அவரது உறவினர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்க மருத்துவக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.