சென்னை: டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ஷியாமளபுரத்தில் 2017ம் ஆண்டு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறை டிஎஸ்பி தாக்கியது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 9 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பிரபாகரன் உட்பட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், டாஸ்மாக் கடை திறக்கும்போது அந்த பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொய்வழக்கு போடப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளத்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கே.பாலு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக திருப்பூர் மங்கலம் காவல்துறை பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.