செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த திருமணி கிராமத்தில் கூட்டுறவு துறை சார்பில், நகரும் நியாயவிலை கடைகள் துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலேரிபாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் கே.சல்குரு வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு, 9 நகரும் நியாயவிலை கடை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், திருமணி காலனியில் புதிய கட்டப்பட்ட நியாயவிலை கடை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர் பென்ஜமின், செய்தியாளர்களிடம் கூறியதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 65 நகரும் நியாயவிலை கடைகள் துவங்கப்பட உள்ளன.முதற்கட்டமாக மேலேரிப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட திருமணி ஊராட்சி நியாயவிலை கடையில் 9 நகரும் நியாய விலை கடை வாகனம் துவங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலம் வீடுகள் இருக்கும் பகுதிக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதன்மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 12,494 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைவார்கள் என்றார்.
மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சந்திரசேகர், முன்னாள் எம்பி மரகதம் குமரவேல், கூட்டுறவு சங்க இயக்குநர் ஆனூர் பக்தவச்சலம், நிர்வாகிகள் உமாபதி, வழக்கறிஞர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நகரும் நியாய விலைக் கடை துவக்க விழா நேற்று நடந்தது. கூட்டுறவு பண்டக சாலை தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர் வாலாஜாபாத் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு பண்டக சாலையின் மேளாளர் ஆராமுதன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், நகரும் நியாய விலைக் கடை வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.