×

50 நாட்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்பிபி காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் இரங்கல்: திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

* பண்ணை வீட்டில் இன்று இறுதி சடங்கு
* பாடும் நிலா பாலு’ என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு தேசிய விருதுகளால் கவுரவிக்கப்பட்டு உள்ளார்.
* ஐம்பது ஆண்டுகளில் 16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.

சென்னை: கொரோனா தொற்று காரணமாக 50 நாட்களாக தீவிர சிகிச்சை  பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். இதனால் திரையுலகமும், இசை ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். எஸ்பிபி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. ‘பாடும் நிலா பாலு’’  என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பின்னணி பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (74), ெகாரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5ம் தேதி சென்னை  சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்ந்தவுடன் அவர் வெளியிட்ட  வீடியோவில், ‘சாதாரண காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஓரிரு நாட்களில் வீடு திரும்பி  விடுவேன். தயவுசெய்து யாரும் எனக்கு ேபான் செய்து நலம் விசாரிக்க  வேண்டாம்’’ என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ம்  தேதி எஸ்.பி.பியின் உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை  வெளியிட்டது. ஓரிரு நாளில் அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண், ‘எனது தந்தை  எஸ்.பி.பி அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். விரைவில் குணமடைந்து வீடு  திரும்புவார்’’  என்று வீடியோ வெளியிட்டார். இதையடுத்து எஸ்.பி.பி கட்டை  விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதனால் அவரது ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். எஸ்.பி.பி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து  எஸ்.பி.பியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை  வெளியிட்டது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும், கடந்த  ஆகஸ்ட் 18ம் தேதி எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக  இருப்பதாகவும், அவருக்கு உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியுடன் எக்மோ கருவி  பொருத்தி செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்தது.

இதை தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் சார்பில்  கடந்த 20ம் தேதி மாலை 6 மணியளவில், எஸ்.பி.பி நலம்பெற வேண்டி கூட்டுப்  பிரார்த்தனை நடந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை எஸ்.பி.பியின் உடல் நிலை மோசம் அடைந்தது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. தொடர்ந்து  அவர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் மற்றும்  எக்மோ கருவி  உதவியுடன்  சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டாக்டர்களால் மீட்க முடியாத  நிலைக்கு  அவரது உடல்நிலை சென்று  விட்டது. நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு எஸ்.பி.பி காலமானார். இந்த செய்தி அறிந்ததும் திரையுலகினரும் இசை ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். அவரது உடல் மாலை 4 மணிக்கு ெசன்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்.பி.பியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பகல் 11 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

எஸ்.பி.பிக்கு  வயது 74. ஐம்பது ஆண்டுகளில் 16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். அவர் சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாவித்திரி, சில நாட்களுக்கு  முன்பு குணமடைந்து வீடு திரும்பினார். மகள் பல்லவி, மகன் எஸ்.பி.பி.சரண்  உள்ளனர். இவர்களில் எஸ்.பி.பி.சரண் பாடகராகவும், நடிகராகவும்,  தயாரிப்பாளராகவும் உள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எஸ்பிபி.யின் மரணத்தின் மூலம், மிகவும் இனிமையான குரலை இந்திய இசை உலகம் இழந்து விட்டது. தனது எண்ணற்ற பாடல்களால் ‘பாடும் நிலா’ என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு தேசிய விருதுகளால் கவுரவிக்கப்பட்டு உள்ளார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி இரங்கல்: எஸ்.பி.பி. மறைவு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘எஸ்.பி.பியின் மறைவால் நமது கலாச்சார உலகம் வலுவிழந்துவிட்டது. நாடு முழுவதும் உள்ள இல்லங்களில் பல்லாண்டுகளாக அவரது குரல் ஒலித்தது. தனது குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரித்தவர் எஸ்.பி.பி’ என தெரிவித்துள்ளார்.  எஸ்பிபி மறைவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : singer ,SBP ,Corona , Famous singer SBP, who had been receiving treatment for Corona for 50 days, has passed away.
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...