சென்னை: சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுவில், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும், புகார் மீது எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும் எனவே அந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் மீதான விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று நீதிமன்றம் கருதினால் வேறு விசாரணை அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிடமுடியுமா, புதிய விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றால் அவர்களை பிரதிவாதிகளாக சேர்க்க வேண்டுமா என்பது குறித்து அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.