×

திருச்செங்கோட்டில் பரபரப்பு- இறந்த தாயின் உடலை வீட்டின் அருகில் தகனம் செய்த மகன்

*கொலை செய்யப்பட்டாரா என விசாரணை
*அஸ்தியுடன் தலைமறைவானவருக்கு வலை

திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே உயிரிழந்த தாயின் உடலை, உறவினர்களுக்கு தெரிவிக்காமல் வீட்டின் அருகே தகனம் செய்த மகன், அஸ்தியுடன் தலைமறைவாகி விட்டதால், அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள தோக்கவாடி விநாயகா நகரை சேர்ந்தவர் பங்கஜம்(65). திருமண புரோக்கரான இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த  25 ஆண்டுகளாக மகன் பிரகாஷ் (40), மருமகள் முத்துலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார். பிரகாஷ் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.  பங்கஜத்தின் 2வது  மகன் சக்திவேல், வேறு ஊரில் தனியாக வசித்து வருகிறார். தறிப்பட்டறையில் வேலை செய்து வரும் பிரகாஷ், பல இடங்களில் கடன் வாங்கி வீடு கட்ட தொடங்கினார். ஆனால், போதிய பணம் இல்லாததால் முழுமையாக கட்டி முடிக்காத வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே, கொரோனா ஊரடங்கால் வருவாயிழந்த பிரகாஷ், வாங்கிய கடனை கட்ட முடியாமலும், குடும்பம் நடத்த முடியாமலும் சிரமப்பட்டு வந்தார். அதேபோல், திருமணங்களும் சரிவர நடக்காத காரணத்தால், பங்கஜத்திற்கும் வருவாய் கிடைக்கவில்லை. இதனிடையே, கடந்த 21ம் தேதி(திங்கட்கிழமை), பங்கஜம் உயிரிழந்தார். தாய்க்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட பணமின்றி தவித்த பிரகாஷ், தெரிந்த நபர்களிடம் கடன் கேட்ட போது, அவர்கள் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வேறு வழியின்றி தனது வீட்டின் முன்புள்ள திடலில், தாயின் உடலுக்கு தீ மூட்டி, அவரே தகனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காத பிரகாஷ், தாயின் அஸ்தியை காவிரியில் கரைக்க எடுத்துச்செல்வதாக கூறி சென்று  விட்டார்.
இந்நிலையில், பங்கஜம் பணத்துக்காக மகனால் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடலை எரித்து விட்டதாகவும், கிராம மக்களிடையே தகவல் பரவியது. இது குறித்து விஏஓ வரதராஜ், திருச்செங்கோடு புறநகர் போலீசார், பிரகாஷின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே அஸ்தியை கரைக்க ஆற்றுக்கு சென்ற பிரகாஷ்,  மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் கிடைத்தால்தான் பங்கஜம், உடல்நலக் குறைவால் இறந்தாரா, இல்லை பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா?, மேலும் வீட்டின் முன்பு சடலம் எரிக்கப்பட்டதில் உள்ள மர்மம்  விலகும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Tiruchengode ,house , Tiruchengode: The body of a deceased mother near Tiruchengode was cremated near the house without informing the relatives.
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்