அரியலூர்: அரியலூரில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. அரியலூர் மாவட்டம் சின்னக்கடை வீதியில் சௌந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீபாலாஜி தங்க நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகில் தேங்காய் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேங்காய் கடையின் வழியே சுவரை துளைத்து மர்ம நபர்கள் நகைக்கடையின் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், கடைலிருந்த செயின், தோடு, வளையல் உட்பட 50 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நகைக்கடைக்கு வந்து தடையங்களை சேகரித்து வருகின்றனர். அதிக நடமாட்டம் உள்ள இந்த வீதியில் சுமார் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற கொள்ளை சம்பவம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.