புதுடெல்லி: தமிழகத்தில் கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 1,140 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜை டெல்லியில் சந்தித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதி அனுப்பிய கடிதத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,” மத்திய கால்நடைத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி தேவை தொடர்பாக தமிழக முதல்வர் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவரிடம் வழங்கினேன். குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தரப்பிலும் 60சதவீதம் நிதி வழங்கி வருகிறது.
இதேபோல் சேலம் மாவட்டம் தசலைவாசல், தேனி மாவட்டம் வீரபாண்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை போன்ற பகுதிகளில் புதிய கால்நடை கல்லூரிகள் அமைக்கவும், மத்திய அரசு 60 சதவீத நிதியினை கொடுக்க வேண்டும் எனவும், மேலும் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 1,140 கோடி நிதியை வழங்க வேண்டும் என தெரிவித்தேன். தமிழக கோரிக்கையை விரைவில் பரிசீலனை செய்து தகவல் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.