நாகர்கோவில்: முகநூல் காதல், டிக்டாக் காதல் என்று காலத்திற்கு ஏற்றாற்போல் காதலும் மாற தொடங்கிவிட்டது. இதிலும் ஒருபடி மேல் சென்று தற்போது பப்ஜி விளையாட்டு மூலம் காதலில் இணைந்துள்ளது ஒரு இளம் ஜோடி. குமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். மர வியாபாரி. 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் பபிஷா (20) திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தார். பின்னர் கல்வியை இடையிலேயே நிறுத்திவிட்டார். இவருக்கு மொபைல் போனில் பப்ஜி விளையாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதன்படி மணிக்கணக்கில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். பெற்றோரும் மகள் ஏதோ விளையாட்டில் தான் ஆர்வமாக இருக்கிறார் என்ற எண்ணத்தில் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். ஆனால் இந்த விளையாட்டு விபரீதமாக மாறிவிட்டது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகன் 24 வயதான அஜின் பிரின்ஸ் என்பவரும் பப்ஜி விளையாடி வந்துள்ளார். இவரும் பபிஷாவும் இணைந்து பப்ஜி விளையாடி வந்து உள்ளனர். இதன்மூலம் 2 பேரும் அறிமுகம் ஆனார்கள். அதன்படி 2 பேரும் அவ்வப்போது போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பப்ஜி விளையாட்டுடன் காதலையும் சேர்த்தே 2 பேரும் வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி திடீரென பபிஷா வீட்டைவிட்டு வெளியேறினார். வீட்டின் அருகில் காரில் காத்திருந்த பப்ஜி காதலன் அஜின் பிரின்சுடன் தலைமறைவானார். தொடர்ந்து தனது மகளை காணவில்லை என்று சசிகுமார் திருவட்டார் காவல்நிலையத்தால் புகார் செய்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த திருவட்டார் போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர்.
காவல்துறையினர் தேடுவதை அறிந்த காதல் ஜோடி கடந்த 22ம் தேதி திடீரென போலீசில் தஞ்சம் அடைந்தனர். உடனே போலீசார் காதல் ஜோடியின் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்நிலையம் வந்த அஜின் பிரின்ஸின் பெற்றோர் காதலர்களை பிரிப்பதில் குறியாக இருந்தனர். இதற்கு மாறாக காதலர்களோ சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் வேறு வழியில்லாமல் அவர்களை சேர்த்து அனுப்பினர். இதையடுத்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் அருகிலுள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணமும் செய்து கொண்டர். பின்னர் அஜினின் பெற்றோருடன் காதல் தம்பதியினர் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.