பெர்லின்: உணவில் விஷம் வைத்ததால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி இயல்பு நிலைக்கு திரும்பியதால் ஜெர்மனி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும் அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி விமான பயணத்தின்போது திடீரென மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அலெக்சி நவால்னியை கொலை செய்ய அவர் அருந்திய தேநீரில் நஞ்சு கலந்திருக்கலாம் என குற்றம் சாட்டிய அவரது ஆதரவாளர்கள் அவரை ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டு தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தொடர் சிகிச்சைக்கு பின் நஞ்சின் ஆதிக்கத்திலிருந்து படிப்படியாக குணமடைந்த அலெக்சி நவால்னி கோமாவிலிருந்து மீண்டார். இதையடுத்து நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அலெக்சி குணமடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள ரஷ்ய அரசு அவர் விரைவில் மாஸ்கோ திரும்புவார் என எதிர்பார்ப்பதாக கூறியிருக்கிறது. இதற்கிடையில் அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி வரும் ஜெர்மனி அரசு இதுதொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.