×

பட்டுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் 2 மாதங்களுக்கு பின் தோண்டி எடுப்பு: உடல் உறுப்புக்கள் திருடப்பட்டதாக உறவினர்கள் சந்தேகம்!!!

தஞ்சாவூர்:  பட்டுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலானது 2 மாதங்களுக்கு பிறகு தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நேரு நகரில் உள்ள பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சலீம். 42 வயதான இவர் பட்டுக்கோட்டை பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சலீமை பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, 23ம் தேதி தொடர் மூச்சு திணறல் ஏற்படவே சலீமை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதற்கிடையில் மருத்துவமனையில் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பின்னர், ஜூலை 29ம் தேதி சலீம் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காலையில் இறந்த செய்தியை மருத்துவமனை 29ம் தேதி மாலை உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து தமிழக அரசு வழிகாட்டுதலின் படி சலீமின் உடலானது பட்டுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலின் பின்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் சலீமின் உறவினர்கள் அவர் இறந்த நாட்களிலிருந்து மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிக்கு அலட்சியப்போக்காக சிகிச்சை அளித்து வருவதாக குற்றம்சாட்டி வந்தனர். மேலும் காலையில் கணவர் இறந்ததை மாலையில் மருத்துவர்கள் தெரிவித்ததாக சலீமின் மனைவி புகார் தெரிவித்து, இதனால் சலீமின் உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்குமோ? என சந்தேகிப்பதாக தஞ்சை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்து வந்தார்.

மேலும் இதுதொடர்பாக உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் சலீமின் உடலானது 2 மாதங்களுக்கு பிறகு தற்போது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினரும் பரிசோதனை செய்ய தயார் நிலையில் உள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



Tags : Coroner ,Relatives ,Pattukottai , Silkworm, corona, excavation, organ, relatives, suspicion
× RELATED பட்டுக்கோட்டையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி