×

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிர் தப்பினர்: மாவட்ட கிரைம்

மாமல்லபுரம்: புதுச்சேரியில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி ஒரு கார், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. மாமல்லபுரம் அடுத்த பேரூர் அருகே உள்ள வளைவில் கார் ெசன்றபோது, எதிர் திசையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த ஒரு கார், அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஒரு கார் மோதிய வேகத்தில் நிலை தடுமாறி அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான  காயத்துடன் உயிர் பிழைத்தனர். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை, மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (எ) பிச்சாண்டி (60). விவசாயி. திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வேனில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் டில்லிபாபு, வேலை இல்லாமல் இருந்தார். இதையொட்டி டில்லிபாபு, வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்துள்ளார். பின்னர், அறுவடை செய்த நெல் மூட்டைகள் விற்பனை ஆகாததால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், பிச்சாண்டி நேற்று முன்தினம், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மதுராந்தகம்: உத்திரமேரூர் அடுத்த எல் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (37). விவசாயி. நேற்று மதியம் பூபாலன், செங்கல்பட்டில் இருந்து உத்திரமேரூர் நோக்கி பைக்கில் பைக்கில் சென்றார். மாமண்டூர் அருகே சென்றபோது, அங்குள்ள உணவகத்தில் இருந்து, அரசு பஸ் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ், பூபாலன் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூபாலன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். புகாரின்படி படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (35). இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களது மகன் சாமுவேல் (3). நேற்று இரவு மாரிச்சாமி, அச்சிறுபாக்கத்தில் இருந்து மனைவி மகனுடன் பைக்கில் மேல்மருவத்தூர் நோக்கி புறப்பட்டார்.

மேல்மருவத்தூர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார், பைக்கை உரசியபடி சென்றது. இதில், நிலை தடுமாறிய மாரிச்சாமி, சென்டர் மீடியனில் பலமாக பைக்கை மோதினார். இதில், தூக்கி வீசப்பட்ட சிறுவன் சாமுவேல் சம்பவ இடத்திலேயே பலியானான். தம்பதி படுகாயமடைந்தனர். புகாரின்படி மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருப்போரூர்: சென்னை குரோம்பேட்டை ராதாநகர், நீலகண்டன் தெருவை சேர்ந்தவர் ராமன் (28). கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் ராமன், இரவு பணி முடிந்து, தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.

வேங்கடமங்கலம் குப்பை கிடங்கு அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், ராமனை மறித்து, சரமாரியாக கத்தியால் குத்தி அவரிடமிருந்து செல்போன், மணி பர்ஸ், மோதிரம் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். ஆனால் ராமன், அலறி கூச்சலிட்டபடி அவர்களுடன் போராடினார். அவரது அலறல் சத்தம்கேட்டு, அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த கூர்க்கா ஒருவர் தடியுடன் ஓடி வந்தார். உடனே மர்மநபர்கள், ராமனை கீழேத் தள்ளி விட்டு தப்பினர். புகாரின்படி தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பம் கிராமத்தில் வசித்தவர் தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த பிரகாஷ் (34).

கல்பாக்கம் அடுத்த அணுபுரம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி செல்வகனி (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரகாஷ், குடிப்பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிரகாஷ் மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றார். அதனை, மனைவி தட்டி கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போதையில் இருந்த பிரகாஷ், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே குத்தி கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிய பிரகாஷை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின்படி, சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : survivors , Cars head-on collision: 6 survivors: District Crime
× RELATED சென்னை எழும்பூர் சிக்னலில் டிராவல்ஸ்...