திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத சுமார் 1.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருக்கழுக்குன்றத்தில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, நிலம் மற்றும் வீட்டு மனைகள் உள்ளிட்ட பத்திரங்கள் பதிவு செய்வது மற்றும் நிலம் சம்பந்தமான வில்லங்கம் போடுவது, பொது அதிகாரம் பதிவு செய்வது, பத்திர நகல் ஆவணம் பெறுவது, திருமணம் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்குள்ள அதிகாரிகள், பத்திரப்பதிவு உள்பட பல்வேறு பணிகளுக்காக, சார் பதிவாளர் அலுவலகம் வருபர்களிடம் புரோக்கர்கள் மூலம் பேரம் பேசி லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
மேலும், லஞ்சம் கொடுக்க மறுப்பவர்களை அலைகழிப்பதாகவும், அரசால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை, அதிக லஞ்சம் பெற்று கொண்டு பத்திரப்பதிவு செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மாலை திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகம் சென்றனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள், ஊழியர்களை வெளியே அனுப்ப மறுத்து, கதவு மூடப்பட்டது. தொடர்ந்து, சார் பதிவாளர் திருமலை தரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
பல மணி நேரம் நடந்த சோதனையில், பல்வேறு ஆவணங்களும், கணக்கில் வராத சுமார் 1.5 லட்சம் பணமும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த சார்பதிவாளர் தரின் காரை, லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையிட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வருவதை அறிந்த புரோக்கர்கள், அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். சில பத்திர எழுத்தர்களும் தங்களது அலுவலகங்களை மூடிவிட்டு ஓடி விட்டனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு இதே சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் அப்போது இருந்த சார் பதிவாளர் பொன்பாண்டி என்பவர், ஒருவரிடம் லஞ்சம் வாங்கும்போது, கையும் களவுமாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.