×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை உயிருடன் மீட்கும் கருவி கண்டுபிடிப்பு : நாகை தொழிலாளி சாதனை

நாகை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை உயிருடன் மீட்கும் கருவியை நாகையை சேர்ந்த தொழிலாளி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செட்டித்தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன்(40). லேத்பட்டறை வைத்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்தால் அந்த குழுந்தைகளை உயிருடன் மீட்கும் கருவியை இவர் கண்டுபிடித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தலைகீழாக விழுந்தாலும், ஒரு கை அல்லது இரண்டு கைகளை தூக்கிக்கொண்டு விழுந்தாலும், இரண்டு கைகளையும் மடக்கிகொண்டு விழுந்தாலும் அதாவது எந்த சூழ்நிலையில் விழுந்தாலும் அந்த குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 6 வகையான கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.

ஒவ்வொரு கருவியுடன் சிசிடிவி கேமராவை பொருத்தி, அதை லேப்டாப்பில் இணைத்துள்ளார். குழந்தையை மீட்கும் கருவி கிணற்றினுள் செல்லும் போது கண்காணிப்பு கேமரா மூலம் ஆழ்துளை கிணற்றில் குழந்தை எவ்வளவு அடி ஆழத்தில் உள்ளது. எந்த சூழ்நிலையில் குழந்தை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.அதே போல் குழந்தையை நெருங்கியவுடன் குழந்தையை பாதுகாப்பாக தூக்குவதற்கு வசதியாக அந்த கருவியில் கைகள் போன்று வடிவமைப்பு செய்துள்ளார். குழந்தை விழுந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருந்து கொண்டு லேப்டாப் வாயிலாக கண்காணித்து கருவியில் பொருத்தியுள்ள கைகளை வசதிக்கு ஏற்றால் போல் விரித்து குழந்தையை கவ்வி தூக்கிகொண்டு வரமுடியும். இதனால் குழந்தை எவ்வளவு தூரமாக இருந்தாலும், எவ்வளவு எடையாக இருந்தாலும் கீழே விழாமல் இருக்கும் வகையில் கருவியை வடிவமைப்பு செய்துள்ளார்.

இது குறித்து நாகேந்திரன் கூறியதாவது: கொரோனா வைரஸ் காலத்தில் எனக்கு வேலை இல்லை. இதனால் இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு குழந்தையை மீட்கும் கருவியை வடிவமைக்க தொடங்கினேன். இரவு பகலாக முயற்சி செய்த காரணத்தால் எவ்வளவு அடி ஆழத்தில் விழுந்தாலும், எந்த பொசிசனில் குழந்தை விழுந்தாலும் மீட்கும் வகையில் 6 வகையிலான கருவியை கண்டுபிடித்தேன். அந்த கருவியை பல முறை பொம்மையை வைத்து பரிசோதனை செய்து பார்த்தேன். அதில் எனக்கு முழு வெற்றி கிடைத்தது.சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றவுடன் சுமார் 30 நிமிடத்தில் குழந்தையை என்னால் உயிருடன் மீட்க முடியும். இந்த கருவியை தயார் செய்ய எனக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே செலவு ஆனது. இந்த கருவியை பயன்படுத்த அரசு அனுமதி தர வேண்டும்.அதே போல் கிணறு, பாதாளசாக்கடை போன்ற இடங்களில் கால்நடைகள் விழுந்தால் அதை மீட்க தீயணைப்பு வீரர்கள் செல்கின்றனர். சில நேரங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக அடுத்த கட்டமாக கருவியை வடிவமைப்பு செய்து வருகிறேன். அரசும், மாவட்ட நிர்வாகமும் ஊக்கம் அளித்தால் என்னால் இந்த கருவியையும் தயார் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும் என்றார்.



Tags : children ,well , Deep hole, children, tool, invention, dragon, worker, achievement
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...