கும்பகோணம்: திருப்பனந்தாள் ஒன்றியத்தில் இயந்திரம் மூலம் நடவு செய்வதற்காக பாய் நாற்றாங்கால் பணியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர். மேட்டூரில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீரை கொண்டு கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி, நெல் விதை விநியோகம் மற்றும் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நீண்டகால நெல் ரகங்களான சி.ஆர். 1009, சி.ஆர்.1009 சப் 1, ஏ.டி.டி.49 போன்ற ரகங்களை சாகுபடி செய்ய ஏதுவாக அதற்கு தேவையான விதைகளை வேளாண் விரிவாக்க மையம், தனியார் விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகள் வாங்கினர்.
அதன்படி கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள குறிச்சி, முட்டக்குடி, நரிக்குடி, பாலாகுடி, பந்தநல்லூர், காமாட்சிபுரம், மரத்துறை பகுதிகளில் நாற்றாங்கால் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரம் மூலம் நடுவதற்காக முன்கூட்டியே பிரத்யேகமாக பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நாற்றாங்கால் அமைப்பதற்கு தேவையான மக்கிய குப்பை, வண்டல் மண்ணை சலித்து பிளாஸ்டிக் தட்டுகளில் நிரப்பி அதில் இயந்திரம் மூலம் நெல் விதைகள் தெளிக்கப்பட்டு நாற்று விடப்படுகிறது.
அதன்பின் 17 முதல் 20 நாட்களில் தட்டுகளில் இருந்து நாற்றுகள் எடுக்கப்பட்டு நடவு இயந்திரம் மூலம் நடவு செய்யப்படுகிறது. மற்றொரு முறையில் நாற்றாங்காலில் உழவு அடித்து விவசாய தொழிலாளர்களால் விதை தெளிப்பு மூலமும் விதை நேர்த்தி செய்து 30 நாட்களில் நாற்று பரித்து நடவு செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.