×

குமரி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் தலைகவசம் அணியவில்லை என ரூ.1600 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்: அதிர்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்

குமரி: இரு சக்கரவாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்றதாகக் கூறி, ஆட்டோ ஓட்டுநருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் செல்வாகரன் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அப்பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது மொபைல் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் செல்வாகரன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தலைகவசம் அணியாமலும், முறையான ஆவணமின்றியும் அதிவேகமாக சென்றதாகக் கூறி காவல்துறையினரின் சார்பில் அபாராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தகவலின் அடிப்படையில், அவர் இணையத்தில் தேடியுள்ளார். அப்போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும், தலைகவசம் அணியாமலும் சென்றதற்காக குலசேகரம் போலீஸார் அவரது ஆட்டோ வாகன எண்ணைக் குறிப்பிட்டு ரூ.1600 அபராதம் விதித்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து செல்வாகரன் கூறும் போது கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக ஆட்டோவை வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தேன். அப்படியிருக்கையில் எனது பகுதியிலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள குலசேகரத்திற்கு நான் சென்றதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் இந்த அபராதத் தொகை எனக்கு பெரிய தொகை என கூறினார். ஆகவே இந்த குளறுபடியை காவல்துறையினர் சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்தக் கட்டணத்தை நான் செலுத்த போவதில்லை எனவும், இது குறித்து சம்பந்தப்பட்ட குலசேகர காவல் நிலைய ஆய்வாளர் விமலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளேன் எனவும் கூறினார்.


Tags : Traffic police ,district ,auto driver ,Kumari , Kumari, auto driver, helmet, Rs 1600 fine, police
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...