பெங்களூரு: பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டப்பேரவை, மேலவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு எம்எல்ஏக்களுக்கான கேன்டீனில் கடூர் தொகுதி பாஜ எம்எல்ஏ பெள்ளி பிரகாஷ் தொகுதி வளர்ச்சி நிதி தொடர்பாக அமைச்சர் நாராயணகவுடாவை சந்தித்து பேசினார். முதலில் இரண்டு பேரும் சுமூகமாக பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்பு ஏற்படும் நிலை உருவானது. உடனே அருகே இருந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் இரண்டு பேரையும் சமாதானம் செய்தனர். அப்படியும் இந்த பிரச்னை தீரவில்லை. கடைசியாக, எம்எல்ஏ அன்னதானி அமைச்சர் நாராயணகவுடா மற்றும் எம்எல்ஏ பிரகாஷ் ஆகிய 2 பேரையும் தனித்தனியாக அழைத்து சென்றார். அத்துடன் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏ இடையே நடந்த வாய் தகராறு விதானசவுதாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.