திருவனந்தபுரம்: என்ஐஏ கடந்த 2 தினங்களுக்கு முன்பு 12 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் 6 பேர் மேற்குவங்க மாநிலம் மூர்ஷிதாபாத்தில் இருந்தும், 3 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.கேரளாவில் பிடிபட்ட முர்ஷித் ஹசன், யாக்கூப் பிஸ்வாஸ், முசாரப் உசேன் ஆகியோரிடம் மேற்கு வங்க மாநில அடையாள அட்டைகள் இருந்தன. ஆனால் அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை எனவும், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி வந்து இங்கு அடையாள அட்டை பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
பிடிபட்ட இந்த 3 பேரும் அல்கொய்தா இயக்கத்துக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு நேரடியாக நிதி சேகரிக்கும் அளவுக்கு போதிய திறமை இல்லை என என்ஐஏ கருதுகிறது. இவர்களின் பின்னணியில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த வேறு யாராவது செயல்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.கொச்சியில் பிடிபட்ட முர்ஷித் ஹசன்தான் எர்ணாகுளம் மாவட்ட தீவிரவாத செயல்களை ஒருங்கிணைத்து வந்துள்ளார். இவரிடம் இருந்து லேப்-டாப் மற்றும் செல்போன் கைப்பற்றப்பட்டது. ஆனால் அவற்றை ஷேரிங் ஆப் மூலம் வேறு யாரோ, வெளிநாடுகள் அல்லது இந்தியாவில் இருந்து இயக்கியிருக்கலாம் என என்ஐஏ கருதுகிறது.
மேலும் அல்கொய்தாவின் செயல்பாடுகளுக்கு கேரளாவில் இருந்து நிதி சேகரிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் 4 அமைப்புகள், 2 நிறுவனங்கள் சந்தேக பட்டியலில் ேசர்க்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இவற்றின் பணபரிமாற்றம் குறித்த விபரங்களை என்ஐஏ ரகசியமாக சேகரித்து வருகிறது. இதற்கிடையே கைதானவர்களில் 8 பேரை இரவோடு இரவாக என்ஐஏ டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளது. அவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்ஐஏ தீர்மானித்துள்ளது.
ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லை
பிடிபட்ட 9 பேரும் அல்கொய்தா இயக்கத்துக்காக தாங்கள் செயல்படுவது ஒருவருக்கொருவர் ெதரியாது. இவர்கள் அனைவரும் தனித்தனியாக தலைவராக இருக்கும் ஒருவரிடம் விபரங்களை பகிர்ந்து கொள்வர். இந்த முறையைத்தான் சர்வதேச அளவில் தீவிரவாத குழுக்கள் செயல்படுத்துகின்றனர். இதில் ஒருவர் பிடிபட்டால்கூட மற்றவர்கள் குறித்த விபரம் தெரியாது. எனவே இவர்கள் தவிர மேலும் சிலர் கேரளாவில் செயல்பட்டு வரலாம் என என்ஐஏ கருதுகிறது.