சென்னை: தங்கியிருந்த அறையை காலி செய்ய கூறிய லாட்ஜ் உரிமையாளரை கண்ணாடி துண்டு வைத்து மிரட்டிய உதவி இயக்குநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் தனியார் லாட்ஜ் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 18ம் தேதி மதுரை வடகரையை சேர்ந்த சினிமா உதவி இயக்குநர் கணேஷ் ஆனந்த் (28) அறை எடுத்து தங்கியுள்ளார். பிறகு அவர் வாடகையும் கொடுக்கவில்லை, அறையையும் காலி செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
லாட்ஜ் உரிமையாளர் ஜான் பிரிட்டோ (51), நேற்று முன்தினம் இரவு இதுபற்றி கேட்டபோது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உதவி இயக்குநர், அறையை காலி செய்ய முடியாது என்று கூறியதுடன், அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து, ஜான் பிரிட்டோ கழுத்தை அறுத்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுபற்றி ஜான் பிரிட்டோ திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் உதவி இயக்குநர் கணேஷ் ஆனந்தை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.