×

கோவா லாட்ஜில் பதுங்கி இருந்த காஞ்சிபுரம் பிரபல ரவுடிகள் 20 பேர் சுற்றிவளைத்து கைது: பரபரப்பு தகவல்

சென்னை: கோவா லாட்ஜில் பதுங்கி இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 20 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. இவர், அடியாட்களை வைத்து தொழிலதிபர்கள் உட்பட பலரை மிரட்டி பணம் பறிப்பது, நிலத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவரை கைது செய்ய காஞ்சிபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். சர்வதேச போலீசார் உதவியுடன் அவரை தீவிரமாக தேடிவந்தனர். கம்போடியா நாட்டில் பதுங்கி இருந்த ரவுடி ஸ்ரீதர், போலீசார் தன்னை கைது செய்ய நெருங்குவதை அறிந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, ரவுடி ஸ்ரீதரின் இடத்தை பிடிப்பதில் அவரது ஆதரவாளர்களிடையே போட்டி நிலவியது. இதில், ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ், ஸ்ரீதரின் உறவினர் தணிகா, பொய்யாக்குளம் தியாகு ஆகியோர் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர். அவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதலில் 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தினேஷ் தலைமறைவாகவே இருந்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் கோவா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி எஸ்பி சண்முகப்பிரியா தலைமையிலான தனிப்படை போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன் கோவா சென்று கண்காணித்தனர். அப்போது, அங்குள்ள தனியார் விடுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பது தெரிந்தது. அந்த விடுதியில் போலீசார் அதிரடியாக நுழைந்து, துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை சுற்றிவளைத்தனர்.  விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகள் தினேஷ், தியாகு, கார்த்திக், ராஜேஷ், மணிகண்டன், டேவிட், ராஜா, சதீஷ், விக்னேஷ், மணிமாறன், துளசிராம், கடலூர் ரவுடி சுரேந்திரன் உள்பட 20 பேர் என தெரிந்தது. அவர்களை கைது செய்து, காஞ்சிபுரம் கொண்டு வந்து விசாரிக்க உள்ளனர்.

தினேஷ், பொய்யாகுளம் தியாகு ஆகியோர் கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் 10 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டினர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது, அவர்கள், கூட்டாளிகளுடன் கோவா சென்று தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் கதி என்ன?
டிஐஜி சாமுண்டீஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரவுடி தரின் முக்கிய கூட்டாளிகளான தினேஷ் மீது 5 கொலை உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளும், பொய்யாகுளம் தியாகு மீது 8 கொலை உள்பட 61 வழக்குகளும் உள்ளன. இவர்கள் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் செய்பவர்களை அச்சுறுத்தி பணம் பறித்து வந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது, கோவாவிற்கு தப்பி சென்றது தெரிந்தது. அங்கு சென்று, ரவுடிகள் 20 பேரை கைது செய்துள்ேளாம். அவர்களை கைது செய்யும்போது, தியாகுவின் 7 வயது மகனும் உடன் இருந்தான்.  அவனை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதா அல்லது சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பதா என ஆலோசிக்கப்படுகிறது,’’ என்றார்.

Tags : Kanchipuram ,celebrity rowdies ,lodge ,Goa , 20 famous rowdies from Kanchipuram ambushed at Goa lodge and arrested: Sensational information
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்