×

அங்கன்வாடிகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும் : மத்திய ,மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,: நாடு முழுவதும் கொரோனோ காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் அங்கன்வாடி குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.கொரோனோ தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் நாடு முழுவதும் உள்ள சுமார் 14 லட்சம் அங்கன்வாடிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மாநிலமான கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சென்று உணவு வழங்கும் திட்டம் அம்மாநிலத்தில் தற்போது அறிமுகம் செயல்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், நாடு முழுவதிலும் உள்ள 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளதால், சரியான உணவு கிடைக்காமல் குழந்தைகள் பசியால் தவித்து வரும் இக்கட்டனான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதில் முக்கியமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு அங்கன்வாடிகள் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு உணவு வழங்குவது குறித்து அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில்,அங்கன்வாடிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறது. இதில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது என்பது முக்கிய கடைமையாக உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அவர்களை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Anganwadis ,children ,State ,Supreme Court ,Governments ,Central , Anganwadis, Children, Health, Federal, State Government, Supreme Court, Notice
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...