பூண்டி: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி வந்தடைந்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்ட ஒப்பந்தத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த 18-ம் தேதி 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆந்திராவில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவை கடந்து தண்ணீர் நேற்று இரவு தமிழக எல்லையான தாமரை குப்பம் 0 பாயிண்ட்டுக்கு வந்தடைந்தது. 0 பாயிண்ட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று காலை தண்ணீர் வந்து சேர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 350 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 109 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணையில் இருந்து 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து அதிகரித்து பூண்டி ஏரியின் கொள்ளளவு கிடுகிடு என உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.