சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவுத்துறை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 32 ஆயிரத்துக்கும் மேலான ரேஷன் கடைகள் நடத்தி வருகிறது. இதில் 27,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் மற்றும் நியாய விலைக்கடைகளுக்கு ஏற்படும் ஏனைய செலவினங்களுக்கு ஆரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இதில் 2017-2018 ஆண்டு முடிய நிலுவை ஏதுமின்றி கடந்த ஆண்டு முழுமையான மானியம் அரசு வழங்கியதினால் கூட்டுறவு சங்கங்கள் புத்துயிர் பெற்றது. அதன்படி 2018-2019ம் ஆண்டிற்கு ரூ398 கோடியும், 2019-2020ம் ஆண்டிற்கு சுமார் ரூ380 கோடி மானியம் அரசு வழங்க வேண்டியுள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் செயல்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு 2019-2020 ஆண்டிற்கான முன்மானியம் ரூ150 கோடி வழங்கியுள்ளது. இதனை, மாநில பதிவாளர் மாவட்ட வாரியாக மானியம் ஓதுக்கீடு செய்து பிறப்பித்துள்ளார். இதன் மூலம் நிதி நெருக்கடியில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தற்காலிகமாக பயனுள்ளதாக உள்ளது. 2018-2019 ஆண்டிற்கு வழங்க வேண்டிய ரூ398 கோடி மானியம் எப்போது கிடைக்கும் என கூட்டுறவு பணியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையினை நிறைவேற்றும் வண்ணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2018-2019க்கான ரூ398 கோடியினை உடன் வழங்கி கூட்டுறவு சங்கங்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.