குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஓடை மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் நீராதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது போன்ற விதி மீறல் கட்டிடங்களை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அரசியல் தலையீட்டால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கூட தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் மறைமுகமாக பாறைகள் உடைக்கப்பட்டு அங்கு காட்டேஜ் மற்றும் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வண்டிச்சோலை பகுதியில் பாறைகளை உடைத்து கட்டிடங்கள் கட்டி வந்தனர், அதே போன்று குன்னூர் நகரின் மத்தியில் உள்ள புளூ ஹில்ஸ் பகுதியில் சிறிது,சிறிதாக பாறைகளை வெட்டி அகற்றி வந்தனர்.
குன்னூர் நகரில் மத்தியில் பாறைகளை உடைத்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குன்னூர் பகுதியில் விதிமுறைகள் மீறி நடைபெற்று வரும் இது போன்ற சம்பவங்களை அதிகாரிகள் தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கால்நடை பண்ணை அமைப்பதாக கூறி நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் பொக்லைன் உதவியுடன் சாலை அமைத்து அங்கிருந்த தேயிலை செடிகளை அழித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பாறைகள் உடைக்க அனுமதி இல்லாத நிலையில் விதிமுறைகளை மீறி அங்கிருந்த பாறைகளை உடைத்து அவற்றை கொண்டு தடுப்புகள் அமைத்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், காந்திபுரம், காட்டேரி உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதியாகும்.
குன்னூர் பகுதியில் விதி மீறிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. தற்போது காட்டேரி பகுதியில் நிலச்சரிவு அபாயம் விடப்பட்ட இடத்தில், கால்நடை பண்ணை என்ற பெயரில் தேயிலை தோட்டத்தை அழித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள பாறைகளை உடைத்து தடுப்புகள் அமைத்து வருகின்றனர். நிலச்சரிவு அபாயம் விடப்பட்ட பகுதியில் இது போன்ற பணிகளை மேற்கொள்ள எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இது போன்று விதிமுறை மீறி பாறைகளை உடைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.