சென்னை: மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா நேற்று சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தார். அவருடன் தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொது செயலாளர் ஈஸ்வர்லால், சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஆகியோர் உடனிருந்தனர். கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது: லாபம் ஈட்டும் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. 2019 ஜூன் மாதத்தில் 100 நாட்களில் ரயில்வேயை தனியார் மயமாக்கும் முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியது. இந்திய ரயில்வேயை தனியாரை விட லாபமாக ஓட்ட பல்வேறு வழிகள் உள்ளது. தனியாருக்கு 30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்குவதற்கு பதிலாக இந்த தொகையை ரயில்வேக்கு வழங்கினாலே இந்த 150 ரயில்களை குறைந்த விலையில் தயாரித்து ஒவ்வொரு மண்டலத்தில் இயக்கினால் தனியார் மயமாக்க தேவை இல்லை.
இவ்வாறு அரசுக்கு பல்வேறு சூழ்நிலையில் லாபம் ஈட்ட வழிகள் இருந்தும் தனியார் மயமாக்குவது கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமாகவே உள்ளது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி முதல் எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் ரயில்வே தனியார் மயமாவதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. போராட்டத்தின் கடைசி நாளான இன்று ரயில்வேயை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பயணிகள், பொதுமக்கள் அனைவரும் இரவு 8 முதல் 8.10 மணி வரை 10 நிமிடங்கள் அனைவரது வீட்டிலும் மின் விளக்குகளை அணைத்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.