சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் (ஏசிஆர்எப்) ஆராய்ச்சி மேற்கொள்ளும் மணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும் ஆண்டுக்கு 25 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் (சிஎப்ஆர்) இயக்குநர் கே.பி.ஜெயா, தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அண்ணா பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தின் 14வது செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ம் தேதி நடந்தது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் ஏசிஆர்எப் திட்டத்தின் கீழ் முழு நேர ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கான செலவினங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏசிஆர்எப் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25 ஆயிரம் என்ற உதவித்தொகை ரத்து செய்யப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பு 2021 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.