பாட்னா : நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பீகாரில் 12 புதிய ரயில் திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் வடகிழக்கு பகுதிகளை பீகார் மாநிலத்துடன் இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பபணித்தார் பிரதமர் மோடி. பீகாரின் குயுல் ஆற்றில் ஒரு புதிய ரயில்வே பாலம், 2 புதிய ரயில் தடங்கல், 5 மணிமயமாக்கல் திட்டங்கள், ஒரு மின்சார எஞ்சின் பணிமனை மற்றும் பற்பக்தியார்பூர் இடையே 3வது தடம் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த பிரமாண்ட கோசி ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ளது பீகார் மாநிலத்திற்கு மட்டும் அல்லாமல் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திற்கும் மிகுந்த் பயனை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். வேளாண்துறையில் விவசாயிகளுக்கு புதிய சுதந்திரம் கிடைத்து இருப்பதாகவும், தற்போது விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை விற்பனை செய்ய பல்வேறு வாய்ப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வந்ததாகவும் தற்போது விவசாயிகளுக்கு புதிய சுதந்திரம் கிடைத்து இருப்பதாகவும் மோடி அப்போது கூறினார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.