விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு பாண்டியன் காலனி குடியிருப்புகளுக்கு மதுரை ரோடு மேல்நிலைத்தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. நகராட்சிக்கான நீராதாரங்கள் வறண்டதால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் மூலம் நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் நடக்கிறது.
மேற்கு பாண்டியன் காலனி பகுதிக்கான குழாய்களில் தண்ணீர் சீராக இல்லாத நிலையில் மோட்டார் மூலம் தண்ணீரை வசதிபடைத்தோர் உறிஞ்சுவதாக குற்றச்சாட்டு தொடர்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் அடிக்கடி மனு அளித்து வருகின்றனர்.
நகராட்சி சார்பில் 3 நாட்களுக்கு ஒரு முறை ஒரு லாரி குடிநீர் கொண்டு வந்து பிளாஸ்டிக் டேங்கில் ஊற்றி செல்கின்றனர்.
லாரி வரும் நாட்களில் மக்கள் காலிக்குடங்களுடன் டேங்க் முன்பாக கூலி வேலைகளுக்கு செல்ல முடியாமலும், வீடுகளில் வேலை பார்க்க முடியாமலும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை தவம் கிடக்கின்றனர். இந்த நிலையை மாற்றி சீரான குடிநீர் வழங்கவும், மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுப்போர் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர்.