வேலூர்: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போதிய அளவு இடம் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வேலூர் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம் செல்லும் பஸ்களை தவிர திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருநதது. இதற்கிடையில், ஊரடங்கு தளர்வில் கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் உள்ளேயும், 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டன. ஆனால், வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் மட்டுமே கடந்த 1ம் தேதி முதல் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று முன்தினம் முதல் வேலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்களும் இயங்க தொடங்கின.
இந்நிலையில் நேற்று காலை வேலூர் பழைய பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே செல்லவும் முடியாமல், வெளியே செல்லவும் முடியாமல் கடுமையான நெரிசல் நீண்ட நேரமாக காணப்பட்டது. இதனால் பணிகளும் கடும் சிரமடைந்தனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர் செல்லும் பஸ்களை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கினால் ஓரளவுக்கு நெரிசல் குறையும். இதேபோல் திருவண்ணாமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அண்ணா கலையரங்கம் அருகே இருந்தும் இயக்கலாம்.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் பழைய பஸ் நிலையத்தில் கார், ஆட்டோ செல்ல விதிக்கப்பட்ட தடை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினால் நெரிசலை குறைக்க முடியும்’ என்றனர்.