மதுரை: திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சிவா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கொரோனா பரிசோதனை முடிவுகள் விரைவில் வழங்கப்படுவதில்லை. பரிசோதனை முடிவுகள் வராமல் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இந்த தாமதத்தால் மாரடைப்பு, இருதயக்கோளாறுகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை வழங்க மருத்துவமனைகள் தயங்குகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு வர 8 நாட்களானதால் அவர் பாதிக்கப்பட்டார்.
கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் கொரோனா பரிசோதனை முடிவுகளையாவது விரைவில் வழங்க வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்து, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கலாகி நிலுவையில் இருக்கும் மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.