வேலூர்: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு, தனியார் பஸ்களை இயக்குவதால் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வேலூர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டுமானப்பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம் செல்லும் பஸ்களை தவிர மற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருநதது. இதற்கிடையில், ஊரடங்கு தளர்வில் கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் உள்ளேயும், 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டன. ஆனால், வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் மட்டுமே கடந்த 1ம் தேதி முதல் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று வேலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், இன்று காலை வேலூர் பழைய பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் பஸ் நிலையத்திற்கு நுழையும் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல், நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் பொதுமக்கள் பஸ்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர் செல்லும் பஸ்களை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கினால் ஓரளவுக்கு நெரிசல் குறையும். ேமலும் பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார் செல்வதை தடுக்க வேண்டும். ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்றினால் நெரிசலை குறைக்க முடியும். மாநகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தில் கார், ஆட்டோ செல்ல விதிக்கப்படட தடை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்’ என்றனர்.