சென்னை: நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதிபெற்ற அதிகாரப்பூர்வ பிரதிநிதி என நடிகர் அஜித் தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித்துக்கு எந்தவொரு சமூக ஊடக கணக்குகளும் இல்லை. அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் இல்லை. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என அஜித் எதற்கும் வருவதும் கிடையாது. இதனால் அவ்வப்போது அஜித்தின் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். அவ்வாறு சமூக வலைதளத்தில் போலியான அஜித் கணக்கு, அஜித் கையெழுத்து உள்ளிட்டவை தொடர்பாக அஜித்தின் சட்ட ஆலோசகர் தரப்பிலிருந்து அறிக்கை விடப்பட்டது.
தற்போது மீண்டும் அஜித் பெயரைச் சிலர் அரசாங்க அலுவலக விவகாரங்களில் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது அஜித்துக்குத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதிபெற்ற அதிகாரப்பூர்வ பிரதிநிதி என நடிகர் அஜித்குமார் தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலை படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளது.
இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் திரு சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகார பூர்வமாக அறிவிக்கிறார். மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை திரு சுரேஷ் சந்திரா அவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.
இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமான யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொது மக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறினார்.