மதுரை: மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் வழக்கில் 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம் அணைக்கரைப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணியப்பனின் மூத்த மகனான இதயக்கனி என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த அவரது உறவினரான புனிதா என்ற இளம் பெண்ணிற்கும் காதல் திருமணம் செய்யப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். இது குறித்து புனிதாவின் பெற்றோர்கள் சாப்டூர் காவல் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
சம்பவம் அறிந்த காவல்துறையினர் இதயக்கனியின் வீட்டுக்கு சென்று பார்த்த போது இதயக்கனியும், புனிதாவும் காதல் திருமணம் செய்தது தெரிய வந்தது. அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாத காரணத்தால் நேற்று மீண்டும் விசாரணைக்கு சென்ற காவல்துறையினர் இதயக்கனியின் வீட்டில் இருந்த சகோதரர் கல்லூரி மாணவனான ரமேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கும், பின்னுமாக பதிலளித்துள்ளார். அதனால் ரமேஷை சாப்டூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதாவது நேற்று மாலை 6 மணி அளவில் அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற ரமேஷ் இரவு வரை வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத பட்சத்தில் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறு மலைப்பகுதி அருகே ஒரு மரத்தில் பிணமாக ரமேஷின் உடல் தொங்கியபடி காணப்பட்டது. இதை கண்ட அப்பகுதி கிராம மக்கள், ரமேஷின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரமேஷின் சடலத்தை சுற்றி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சூழ்ந்து கொண்டனர். இதனை தொடந்து அங்கு வந்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான அதிரடிப்படை போலீசார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது விசாரணைக்கு அழைத்து சென்ற ரமேஷை காவல்துறையினர் தான் கொன்றிருக்க கூடும் என்று கிராம மக்கள் சந்தேகத்தின் பேரில் கூறியதால் ரமேஷின் உடலை அப்புறப்படுத்த விடாமல் கிராம மக்கள் தடுத்தனர். காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்தால் தான் ரமேஷின் உடலை அப்புறப்படுத்த முடியம் என பகிரங்கமாக தெரிவித்தனர். இதனால் சுமார் 6 மணி நேரமாக தொடர் போராட்டம் நடைபெற்றது. 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பேரையூர் டிஎஸ்பி மதியழகன் சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதியராஜா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
அதாவது மர்ம சாவு குறித்து காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதயக்கனியின் வீட்டுக்கு சென்று புனிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர் உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.