டெல்லி : விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். படைப்பு கடவுளாகவும், தெய்வீக தச்சர் என கொண்டாடப்படும் விஸ்வகர்மா ஜெயந்தி தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. சுயம்புவாக உருவாகிய விஸ்வகர்மா, இந்த உலகத்தை உருவாக்கியவர் என நம்பப்படுகின்றது. இந்தியா முழுவதும் தொழில் விருத்திக்கடவுளான ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செய்யும் தொழிலையே தெய்வம் என்று கருதி தங்களின் படைப்புகளின் மூலம் ஒட்டுமொத்த மனித குலத்தையே மேம்படுத்துவோருக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.இதே போலவே மகாளய தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “இந்த மகாளய தினத்தன்று உலகப் பெருந்தொற்றை வீழ்த்துவதற்கான வலிமையை வேண்டி துர்க்கை அன்னையை வணங்குவோம்.துர்க்கை அன்னையின் தெய்வீக ஆசீர்வாதங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். நமது புவிப்பந்து வளம் பெறட்டும். சுபமான மகாளயம்!” என்று கூறியுள்ளார்.