சென்னை: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்னை அண்ணாசாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.சம்பத், உதயகுமார், மாஃபா பாண்டியராஜன், சரோஜா உள்ளிட்டோரும் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மு.க.ஸ்டாலின் மரியாதை:
முன்னதாக, தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இதனைபோல், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகள், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தந்தை பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.